ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
மன்னார் மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதும் அவற்றிக்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
மன்னாரை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
அதன் பின்னர், நடுக்குடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்து, மீனவ சமூகத்தவர்களுடன் உரையாடி அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.
நடுக்குடா மீனவ கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு, அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன் காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரென்லி டிமேல் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.